Tuesday, November 1, 2022

எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

பதுளை ஹுமைரா அல் அமீன் 

இன்றைய நாட்களில் இலக்கிய உலகினால் நன்கு அறியப்பட்ட ஒருவராகவே வெலிகம ரிம்ஸா முஹம்மத் காணப்படுகிறார். பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் வாசகர்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானவர். மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்ட  இவர், ஓர் எழுத்தாளராகவும் கவிஞராகவும் மிளிர்கிறார். வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரில் இவரது பரவலான ஆக்கங்களை ஊடகங்களில் களப்படுத்தி வந்தாலும் வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில், ஆர்.எம். ஆகிய புனைப் பெயர்களிலும் இவர் தனது ஒரு சில ஆக்கங்களை எழுதியுள்ளார்.  1998 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்தும் எழுதிவரும் இவருடனான நேர்காணல்கள் தேசிய ஊடகங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன அத்துடன் ஒலி,ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 14 நூல்களை வெளியிட்டு இவர் இலக்கியத் துறைக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். அத்துடன் ஊடகத் துறையில் இவருக்குள்ள ஆர்வம் காரணமாக 2013 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியையும் பூரணப்படுத்தியுள்ளார்.

இளவயதிலேயே தன் தாயாரை இழந்து குடும்பம் எனும் சுமையை தன் முதுகில் ஏந்திக்கொண்டு கத்தி மேலே நத்தையாக நடந்து வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை அனுபவங்கள், மனத்துயரங்கள் எப்படியிருக்கும் என்பதை வார்த்தைகளால் வரையறை செய்துவிட முடியாது. அந்த அனுபவங்களை மொழியாக்கி, உயிர் கொடுத்து கவிதைகளின் மூலம் தனது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி சற்று ஆறுதலடைகிறார் சகோதரி ரிம்ஸா முஹம்மத்.  

தென்றலின் வேகம் என்ற கவிதை நூலை 2010 இல் வெளியிட்டு இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த இவர், எரிந்த சிறகுகள் என்ற கவிதைத் தொகுதியையும் வெளியீடு செய்துள்ளார். 152 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த எரிந்த சிறகுகள் கவிதை நூலில் பல்வேறு தலைப்புக்களில் அமைந்துள்ள 54 கவிதைகளும் 07 மெல்லிசைப் பாடல்களும் இடம்பிடித்துள்ளன.

"எரிந்த சிறகுகள்" கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைச் சிறகுகளை நான் மெதுமெதுவாகப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். அந்த எரிந்துபோன இறகுகளின் பல இடங்களில் காயங்கள், கொஞ்சம் கண்ணீர், வலிகள், வேதனைகள் என்று அத்தனைக்கும் தனக்குத் தானே மருந்திட்டுக் கொண்டு பறந்துவிட்ட ஒரு குருவியின் குதூகலம் அந்தக் கவிதைகளில் தெரிகிறது. இவருடைய அர்த்தமுள்ள அந்த வரிகளுக்குள் ஆயிரம் பாடங்களைக் கண்டுகொள்ள முடிகிறது.   

அன்பு, காதல், நட்பு, போராட்டம், ஏமாற்றம், முரண்பாடுகள் இன்னும் எத்தனையோ என்று வாழ்வின் அத்தனை உணர்வுகளையும் இவர் கவிதைகளின் சிறகுகள் சுமந்து செல்கின்றன. சில வரிகள் அப்படியே உள்ளத்தில் புதைந்து கொண்டன. மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டன. வலிகளின் வரிகளுக்குள் தலை தடவும் ஆறுதலும் அவருக்கு அவராகவே ஒத்தடம் கொடுத்துக் கொள்கின்றது.

வாழ்க்கைப் பூங்காற்று (பக்கம் 28) என்ற தலைப்பில் அமைந்த கவிதையிலுள்ள பின்வரும் வரிகள் எத்தனை அருமையாக அமைந்துள்ளன. தன் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்களை பாறைகளாகப் பார்க்கிறது கவிஞரின் மென்மையான மனது. துன்பங்களோடு போராடினாலும் உள் மனதில் எங்கோ ஒரு மகிழ்ச்சி, தைரியம், நம்பிக்கை இருப்பதை உணர்த்துவதாய் அழகாகச் சொல்கிறது அந்தக் கவிதையின் வரிகள். கூடவே வாசிக்கும் போது ஓர் எதிர்ப்பார்ப்பும் தன்னம்பிக்கையும் எம்மைத் தழுவிக்கொள்கிறது.


பாறைகளுடன் நான்

சண்டையிட்டிருக்கிறேன் - என்

இதயக் குமுறல்கள்

இந்த உலகில்

எதிரொலிக்கவே இல்லை என்று!

ஆனால்

பூங்காற்று மட்டும் வந்து

என் காதுகளில்

ரகசியம் சொன்னது

வாழ்க்கை வாழ்வதற்கே என்று!!!


இன்னும் மகனைப் பிரிந்த ஓர் தாயின் ஆதங்கமாய் தவிப்பு (பக்கம் 32) என்ற கவிதை அமைந்துள்ளது. பிள்ளைகளுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து மகிழ்ச்சியை அவர்களோடு பகிர்ந்து, தன் முழு நேரத்தையும் அவர்களுக்காகவே செலவு செய்து வாழும் ஒரு தாயின் முதுமைப் பருவத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்ட தன் மகனின் வருகைக்காய் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு தாயின் ஆதங்கம், அவளின் கண்ணீர் இந்தக் கவிதை வரிகளில் தெரிகிறது. அந்தத் தாயின் உள்ளத்தை வெளிப்படுத்தும் முகமாக தனக்குள் அந்த வலியை உணர்ந்து கொண்டு சிறப்பாய் எழுதியிருக்கிறார். கவிதையின் சில வரிகள் இதோ:-


எனைப் பார்க்க

இன்று வருவாய்..

இல்லையில்லை

நாளை வருவாய்

என்றெண்ணியே

என் வாழ்நாள் கழிகிறது!


நாட்கள் சக்கரம் பூட்டி

ஓடும் என்று பார்த்தால்

அவையோ

ஆமை வேகத்தில் நகர்ந்து

என் உயிரை வதைக்கிறது!


ஒப்பனைகள் (பக்கம் 38) என்ற கவிதை வேஷமிடும் போலி மனிதர்களுக்கு சாட்டையடியாய் வந்து விழுகிறது. கொஞ்சம் அரசியலும் பேசுகிறது. 


வாக்குறுதியின்

மகிமை தெரியாதவர்களெல்லாம்

மேடைகளில்

வாக்குறுதிகளை

அள்ளி வீசுகிறார்கள்!


மனிதநேயம்

துளியுமற்றவர்களெல்லாம்

அதைப்பற்றி

கதைகதையாய்ப்

பேசுகிறார்கள்!


ஏழைகளைப் பார்த்து

நக்கலாக சிரிக்குமவர்கள்

தம் முன்னைய

வாழ்க்கையைப்பற்றி

சிந்திக்கவேயில்லை!


அகம்பாவத்தை

அகம் முழுவதும் சுமந்துகொண்டு

ஆன்மீகம் பேசுவது

வேடிக்கையாக இருக்கிறது!


மனிதத் தன்மையற்று

நடக்குமவர்கள்

மகான் என்று

தன்னை சொல்லிக்கொள்வதும்

வாடிக்கையாக இருக்கிறது!


அவர்களின்

முகத்திற்கும் அகத்திற்கும்

சம்பந்தமேயில்லாத பின்

ஒப்பனைகள் மட்டும் எதற்கு

அகற்றிவிடட்டும்!!!


எத்தனை உண்மை முகமே ஒப்பனை என்றாகிவிட்ட போது அதன் மீது இன்னும் ஒப்பனைகள் எதற்கு என்று தனது கவிதை மூலம் கொஞ்சம் காரசாரமாகவே கேட்கின்றார் ரிம்ஸா முஹம்மத். உண்மைகள் மரித்துப் போன உலகில் போலிகள் எவ்வளவு சுதந்திரமாக நடமாடுகின்றன. ஆனாலும் ஒரு நாள் வேஷம் கலைந்து விடத்தானே போகிறது. கேட்க வேண்டிய நியாயமான கேள்விதான். கவிஞர் கொஞ்சம் சூடாகவே கேட்டுவிட்டார்.            

தீராத மன நதி ஓட்டம் (பக்கம் 40) என்ற கவிதையில் தன் வலிகளை கண்ணீருக்குள் மறைத்து வைத்திருப்பதாகச் சொல்லி எம் மனதையும் உருக வைக்கிறார். அந்தக் கவிதை வரிகளை வாசிக்கும் போது எம் கண்களும் கசிகிறது.          


வெந்துபோன என்

உள்ளத்தில்

வந்துபோனவை

துன்பம் மட்டுமே..

நாதியற்ற என் நிலை

தேதி தெரியாத

முடிவை நோக்கியே!


தீர்ந்துவிட முடியாத

துன்ப ஓடைகளை

வலுக்கட்டாயமாக

கட்டுப்படுத்தினேன்..

என் கண்ணீருக்குள்!


மகிழ்ச்சி எங்கோ தொலைந்து போக, துன்பங்கள் மட்டுமே தொடர்ந்து வர.. என்றுதான் முடியும் இந்தச் சோக வாழ்க்கை என்று ஏங்கும் ஒரு ஏழை நெஞ்சத்தின் அங்கலாய்ப்பை அந்தக் கவிதை வரிகள் அடுக்காய்ச் சொல்லி அழ வைக்கின்றன.  

முகஸ்துதிப் புன்னகையின் பின்னால் மறைந்திருப்பவர்களைப் பார்த்து சில வரிகளும் அங்கே புன்னகைப் பூச்சு (பக்கம் 48) என்ற கவிதையில் முன்வைக்கப்படுகின்றன. வார்த்தைகளில் மட்டுமே வேதம் சொல்லித் திரியும் வேஷதாரிகளை தனது பின்வரும் இந்தக் கவிதை வரிகள் மூலம் தட்டிக் கேட்கிறார் கவிஞர். 


வெறும் பேச்சில் மாத்திரம்

நீ உச்சரிக்கிறாய் வேதம்..

நிஜத்தில் புனிதனாயிருக்காத

நீ சுட்டெரிக்கும் பூதம்!


சந்திரனைக் காட்டிக்காட்டி

பொய் கூறியது போதும்..

நீ அரிச்சந்திரனாயிரு

மெய்யாய் இனிமேலும்! 


அன்பும் கனிவும் மட்டுமல்ல சகோதரி ரிம்ஸா முஹம்மதின் கவிதைகளில் தைரியமும் வெளிப்படுகிறது. போராடி ஜெயிப்பதுவே வாழ்க்கை எனும் தத்துவத்தை வரிகளாய் வடித்து அந்த வரிகளுக்குள் வாழ்ந்தும் காட்டுகிறார். பாராட்டை மட்டுமே எதிர்ப்பார்த்து ஓர் எழுத்தாளன் பயணிக்க முடியாது. சில இடங்களில் பாறைகளின் மீதும் முட்டி மோதி, அந்தப் பாறைகளையும் உடைத்துத்தான் தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது இவரின் பல கவிதை வரிகள். கானகத்தின் நடுவில் தனியாக தனக்கென்றொரு தனிப் பாதையை அமைத்துக் கொண்டு செல்லும் தைரியம் அவர் கவிதைகள் பலவற்றில் சிறப்பாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு கவிதைகளுக்குள்ளும் ஆயிரம் உணர்வுகள் பொதிந்துள்ளன. ஒவ்வொரு உணர்வுக்காகவும் ஒவ்வொரு கவிதையென்று அத்தனை கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் அருமையான நகர்வாக இந்தக் கவிதைத் தொகுதி அமைந்துள்ளது. 

கவிதைத் துறையில் மட்டுமல்லாமல் மெல்லிசைப் பாடல்கள், சிறுகதை, சிறுவர் படைப்புகள் போன்ற துறைகளில் தனது கவனத்தைச் செலுத்திவரும் இவர் நூல் விமர்சனத் துறையிலும் தனக்கென்றொரு தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார். இதுவரை 160 க்கும் மேற்பட்ட நூல்களுக்கு தனது நேரகாலங்களைச் செலவழித்து நூல் விமர்சனங்களை எழுதியுள்ளார். மேலும் ஏனைய இலக்கியவாதிகளுடனான 100 க்கும் மேற்பட்ட நேர்காணல்களையும் செய்து அதன் மூலமாகவும் நன்கு பிரபல்யம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்து இலக்கிய வானில் ஒரு மின்னும் தாரகையாக மிளிரும் சகோதரி ரிம்ஸாவின் எழுத்துப் பணியோடு சமூகப் பணிகளும் இன்னும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்!!!


நூல் - எரிந்த சிறகுகள்

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - ரிம்ஸா முஹம்மத்

தொலைபேசி - 0775009222

வெளியீடு - கொடகே பதிப்பகம்

விலை - 400 ரூபாய்



பதுளை ஹுமைரா அல் அமீன் 


Saturday, October 29, 2022

தென்றலின் வேகம் மற்றும் எரிந்த சிறகுகள் ஆகிய இரு கவிதை நூல்கள் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் தென்றலின் வேகம் மற்றும்

எரிந்த சிறகுகள் ஆகிய இரு கவிதை நூல்கள் 

பற்றிய கண்ணோட்டம்


ஈழத்து இலக்கியத் துறையில் வடக்கு மற்றும் கிழக்கிலங்கைப் படைப்பாளிகளது பங்களிப்பைத் தொடர்ந்தே தென்னிலங்கை படைப்பாளிகளது பிரவேசம் இலக்கிய உலகில் நிகழ்ந்தது. தென்னிலங்கைக் கவிதைத் துறை வளர்ச்சிக்கு பல கவிஞர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். தென்னிலங்கையின் ஆரம்பகட்ட இலக்கிய முயற்சிகளாக மதம் சார்ந்த செய்யுள் இலக்கியங்களே காணப்பட்டன. மார்க்க அறிஞர்களே இதன்போது இலக்கியவாதிகளாகவும், இலக்கியத் துறைக்குப் பங்களிப்புச் செய்தவர்களாகவும் இருந்தனர். பின்னர் பத்திரிகைகளின் தோற்றம் மற்றும் சமூக, அரசியல் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன தென்னிலங்கை இளைஞர்கள் பலரது இலக்கியத் துறைப் பிரவேசத்திற்கு வித்திட்ட காரணிகள் எனலாம். 


1960களின் பின்னர் ஏராளமான தென்னிலங்கைக் கவிஞர்கள் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் தமிழக சஞ்சிகைகளில் தமது கவிதைகளை எழுதி வந்துள்ளனர். ஆயினும் இவர்களில் பெரும்பாலானோரது கவிதைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்படவில்லை. திக்குவல்லை கமாலின் 'எலிக்கூடு' (1973) கவிதைத் தொகுதியே தென்னிலங்கையின் முதலாவது புதுக்கவிதைத் தொகுதியாகும். 1973 முதல் 2022 ஆம் ஆண்டு வரை தென்னிலங்கையிலிருந்து 20 க்கும் கிட்டிய கவிதைத் தொகுதிகளே வெளிவந்துள்ளன. தென்னிலங்கைத் தமிழ்க் கவிதைகளில் சமயம், உள்நாட்டுப் போர், சமாதான வேட்கை, வறுமை, பெண்ணியம், சீதனம், காதல் முதலானவை பிரதான பாடுபொருள்களாகக் காணப்படுகின்றன. 

வெலிகம ரிம்ஸா முஹம்மதும் தென்றலின் வேகம், எரிந்த சிறகுகள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு கவிதைத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். அத்துடன் இவர் இதுவரை எழுதியுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட கவிதைகளில் பலவற்றை தேசிய பத்திரிகைளிலும் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகளிலும் களப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிம்ஸா முஹம்மத், மாத்தறை மாவட்ட வெலிகம தேர்தல் தொகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பல்துறை இலக்கியங்களிலும் ஆர்வமுள்ள ஒரு கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, பாடலாசிரியர் என பன்முகப்பட்ட ஆளுமையுடையவர். 

ரிம்ஸாவின் முதலாவது இலக்கியப் படைப்பாக அவரது 'தென்றலின் வேகம்' என்ற கவிதைத் தொகுதி 2010 இல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 'எரிந்த சிறகுகள்' என்ற கவிதைத் தொகுதியை 2015 இல் வெளியிட்டு கவிதைத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். மேலும் 'ஆடம்பரக் கூடு' (2012), 'என்ன கொடுப்போம்' (2012), 'பாடல் கேட்ட குமார்' (2013) 'இதுதான் சரியான வழி' (2013) ஆகிய சிறுவர் கதை நூல்களும், 'வண்ணத்துப் பூச்சி' (2014) எனும் சிறுவர் பாடல் நூலும், 'கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை' (2013), 'அறுவடைகள்' (2015) ஆகிய விமர்சன நூல்களும், 'விடியல்' எனும் ஆய்வு நூலும், 'எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம்' (2021) எனும் ஆவண நூலும் கணக்கீட்டுத் துறையில் 'வங்கிக் கணக்கிணக்கக் கூற்று', 'கணக்கீட்டுச் சுருக்கம்', 'கணக்கீட்டின் தெளிவு' ஆகிய 03 நூல்களுமாக இவரால் இதுவரை மொத்தம் 14 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இவர் பூங்காவனம் இலக்கிய அமைப்பின் தலைவராகவும் "பூங்காவனம்" காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் தனது இலக்கியச் சேவையைத் தொடர்ந்து வருகிறார். அந்தவகையில் சஞ்சிகையின் துணையாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவோடு இணைந்து இதுவரை 38 பூங்காவனம் காலாண்டு இதழ்களைத் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வெளியீடு செய்து வந்துள்ளார். 

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் முதலாவது இலக்கியப் பிரசவமான 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி 2010 ஆம் ஆண்டு இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்டது. கால வெள்ளம் அடித்துக் கொண்டு போக முடியாதபடி ஒரு சில கவிதைகளையாவது தமிழுக்குத் தர வேண்டும் என்ற இவரது கனவின் வெளிப்பாடாகவும் காலம் இவருக்கு அளித்த ரணங்களும் உலகை வெல்ல வேண்டும் என்று இவர் பொறுத்துக் கொண்;ட வடுக்கள் முதலிய வாழ்வின் அனுபவச் சுமைகளையும் எழுத்துக்களில் வடிப்பதற்காகவே 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி படைக்கப்பட்டதாக இக்கவிதைத் தொகுதியின் என்னுரையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் குறிப்பிடுகிறார். இக்கவிதைத் தொகுதியில் ஆராதனை, நிலவுறங்கும் நல்லிறவு, ஒலிக்கும் மதுர கானம், கண்ணீரில் பிறந்த காவியம், வெற்றியின் இலக்கு, விடியலைத் தேடும் வினாக்குறிகள் முதலான 64 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 

'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து வெலிகம ரிம்ஸாவினது 'எரிந்த சிறகுகள்' என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி 2015 ஆம் வெளியிடப்பட்டது. 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதி பெரும்பாலும் அகவுணர்வு சார் விடயங்கள் மற்றும் சமூக யதார்த்த விடயங்களைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இத்தொகுதியில் 54 கவிதைகளும் 7 மெல்லிசைப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு விடயங்கள் பற்றிப் பேசுகின்றன. ஆன்மீகம், சமுதாய விமர்சனம், நாட்டு நிலைமை, காதல் உணர்வுகள், தனிமனித உணர்வுகள், தனிமனித மேம்பாடு, பெண்ணியம், தொழிலாளர் நிலை, ஏழ்மை, அறிவுரை முதலான பல விடயங்களை இக்கவிதைகள் தொட்டு நிற்கின்றன.

 வெற்றிகள் உன்னை ஆளட்டும், வாழ்க்கைப் பூங்காற்று, தொலைத்த கவிதை, தவிப்பு, எல்லாம் மாறிப் போச்சு, என்ன வாழ்க்கை, காலங்களின் பிடிக்குள், ஓலைக் குடிசையும் பாதி நிலவும், சத்தமில்லாத யுத்தம் முதலான 54 கவிதைகளும் வெயில் நிறத்து தோல் கொண்டு, வல்லோனின் ஆணை, கண்கள் உன்னைத் தேடுதடி, ஆயிரம் சொந்தங்கள், ஏன் ஏன் அப்படிப் பார்த்தாய், பூக்கள் யாவையும், இந்த உலகம் நிலையில்லை முதலிய 7 மெல்லிசைப் பாடல்களும் 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

இனி 'தென்றலின் வேகம்' கவிதை நூலில் இருந்து இரசனைக்காக சில கவிதைகளை எடுத்து நோக்குவோம். 

குர்ஆன், நபிவழி என்பவற்றினைப் பின்பற்றி இம்மை வாழ்வைப் பண்படுத்திக் கொள்வதன் மூலம் அழிவே இல்லா நிரந்தரமான மறுமை வாழ்க்கையில் வெற்றி பெற்ற அடியானாக மிளிரலாம் என்பதை 'தென்றலின் வேகம்' நூலில் உள்ள வெலிகம ரிம்ஸாவினது 'உயிர் செய்' (பக்கம் 48) எனும் கவிதை எடுத்துரைக்கிறது. 


அல்லாஹ்வின் அடியானே! 

அவனி வாழ்விலே 

அப்பழுக்கில்லாமல் வாழ்ந்து 

ஆத்மாவை புதுப்பித்துக்கொள்! 

ஆஹிரத்தின் அமைவிடத்தை 

அதிர்ஷ்டவசமாய் 

பதிப்பித்துக்கொள்! 


சங்கை நபியாரின் 

ஷரீஅத்களை துறந்து 

சல்லாபத்தில் சஞ்சரிப்போனுக்கு 

சுவனம் என்பது இமயம்! 

போகும் பாதை சீராய் அமைந்தால் 

மறுமை இன்பமாய் அமையும்!


ரிம்ஸா முஹம்மதின் 'பொய் முகங்கள்' (பக்கம் 77) எனும் கவிதை, உள்நாட்டில் அண்மைக் காலங்களில் இனவாதம் தலைதூக்கவும் சிறுபான்மையினருக்கு எதிராக நாசகாரச் செயல்களை மேற்கொள்ளவும் துணையாய் நின்ற சில இனவாத மதப் போதகர்களின் செயல்களை விமர்சிப்பதாக அமைகிறது. இத்தகைய இனவாத சிந்தனை படைத்தவர்களின் போலி முகங்கள் குறித்து உணர்த்திட தொன்ம உத்தியினைக் கையாண்டுள்ளார். 


நீங்கள் 

நல்லவர்கள் தாம்! 

மிக மிக நல்லவர்கள் தாம்! 


அழுக்குண்ணி சிந்தையையும் 

அடுத்து கெடுக்கும் 

அடாவடித் தனத்தையும் 

அங்கிக்குள் மறைத்து..


அந்த அரிச்சந்திரனுக்கே 

அவ்வப்போது வாய்மை 

அரிச்சுவடியை 

கற்றுத் தந்தீர்களே 

அப்போதும் நல்லவர்கள் தாம்!


தொடர்ந்து 'எரிந்த சிறகுகள்' கவிதை நூலில் இருந்து சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம். 

ரிம்ஸா முஹம்மத், தனது 'காலங்களின் பிடிக்குள்' (பக்கம் 36) எனும் கவிதையில், சீதனத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை புதியதொரு கோணத்தில் அணுகுகிறார். திருமணச் சந்தையில் இன்றும் ஆண்களுக்கான 'கேள்வி' உயர்ந்திருப்பதாலேயே ஆண்கள் விரைவில் சீதனத்திற்கு விலைபோகிறார்கள். 


பணத்துக்கு ஆசைப்பட்ட நீ 

கொழுத்த சீதனம் தின்று 

பங்களா வீட்டின் எஜமான் 

என்ற பெயரில் 

வேலைக்காரனானாய்!


காதலிக்கும் போது பொருளாதார வேற்றுமைகளை கருத்திற் கொள்ளாது உருக உருகக் காதல் செய்த காதலன் திருமணம் என்று வரும் போது மாத்திரம் சீதனத்திற்கு ஆசைப்பட்டு காதலை உதறிச் செல்கின்றான். சீதனத்தின் காரணமாக இத்தகையதோர் துரோகம் இழைக்கப்பட்டதை எண்ணி துயருறும் காதலியின் உள்ளக் குமுறலாக இக்கவிதை அமைகிறது. ஆணாதிக்க மரபின் ஓர் அம்சமான சீதனம் எனும் சாபக்கேட்டினால் பெண்களின் வாழ்க்கையிலும் சமூகத்திலும் ஏற்படக்கூடிய சீர்குலைவுகளையும் பெண்கள் பற்றிய பாரம்பரியமான கருத்துக்களையும் அழுத்தமாகப் தமது கவிதைகளில் பேசியுள்ளனர்.

வெலிகம ரிம்ஸாவின் 'நிகரற்ற நாயனே' (பக்கம் 46) எனும் கவிதையின் ஆரம்ப வரிகள், வல்ல இரட்சகனாகிய அல்லாஹ்வின் வல்லமையைப் போற்றியும் அவனது அருட்கொடைகளை நினைவு கூர்வதாகவும் அமைந்துள்ளது. 


யா அல்லாஹ் 

அலைகளின் நாதத்திலும் 

உன் வல்லமையை 

இனிதே காணுகிறேன்! 


குயிலின் ராகத்திலும் - உன்

குத்ரத்தின் வலிமைதான் 

துல்லியமாய் ஒலிக்கிறது.. 

உன் அருள் மழையால் 

இவ்வுலகம் செழிக்கிறது!

 

இத்தகைய அருட்கொடைகளின் நாயகனான அல்லாஹ்விடம் தனது வாழ்வு வளமாக கருணை புரியுமாறு மன்றாடி நிற்பதாக கவிதையின் இறுதி வரிகள் உள்ளன. 


நான் பயணிக்க வேண்டியுள்ளேன் 

இன்னும் தொலை தூரமும் 

தீயவற்றிலிருந்து 

என்னைக் காத்;திடு 

எல்லா நேரமும்!

 

மேலும் ரிம்ஸா முஹம்மது தனது 'இருகரம் ஏந்திடுங்கள்' (பக்கம் 61) எனும் கவிதையில், நவீன உலகினில் நல்வழி தவறாது, தொழுகை முதலிய இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமும் நல்லிணக்கம், அயலாருடன் நட்புறவு பேணல் முதலிய இஸ்லாம் காட்டித் தந்த ஒழுக்க விழுமியங்களின் மூலமும் இம்மை, மறுமை வாழ்வை செம்மையாக்க முயல வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

ரிம்ஸா முஹம்மதின் 'வசந்த வாசல்' (பக்கம் 101) எனும் கவிதையில் தொன்ம உத்தி கையாளப்பட்டுள்ளது. இக்கவிதையில் இராமன் மற்றும் இராவணன் ஆகியோரின் குணங்களைக் கூறுவதனூடாக மனித உள்ளத்தின் தன்மை குறித்து இலகுவாக வாசகர்களுக்கு உணர்த்த முனைந்துள்ளார் கவிஞர் ரிம்ஸா முஹம்மத். 


எல்லோரும் 

இராமர்கள் தானே.. 

தத்தமது இராவணக் குணங்கள் 

அம்பலமாகும் வரை!


தியாகத்திற்கு இலக்கணமாய் அமையும் ஹஜ்ஜுப் பெருநாளின் வரலாற்றையும் அதன் மகிமையையும் வெலிகம ரிம்ஸா அவர்களது 'தியாகத் திருநாள்' (பக்கம் 103) எனும் கவிதை எடுத்துரைக்கிறது. 


இப்ராஹீம் நபியவர்தான் 

இஸ்லாமிய இலட்சியத்தால் 

இனிதான புதல்வரையும்

இழந்திடத் துணிந்தாரே! 


ஹாஜரா அம்மையாரும் 

அராபியப் பாலையிலே 

வல்லவன் கட்டளையை 

வாஞ்சையுடன் செய்தாரே!

 

ரிம்ஸா முஹம்மதின் 'ஓலைக் குடிசையும் பாதி நிலவும்' (பக்கம் 105) எனும் கவிதை வாழ்க்கையில் சொல்லொனாத் துயரங்கள் சூழ்ந்து வந்தாலும் படைத்த இறைவன் மீதான நம்பிக்கையை இழக்காது, இஸ்லாத்தின் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் உதவியை நாட வேண்டும் என வலியுறுக்துவதோடு நாளை வரும் மறுமைக்கான விளைநிலமே உலகம் எனும் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து சீறிய வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறது. 

 

உடைந்து தொங்குது 

என் குடிசைக் கூரை - வார்த்தோமே 

வீடு பணம் சுனாமிக்குத் தாரை! 

பொல்லாத கஷ்டங்கள் 

பல வந்தபோதும் 

அல்லாஹ்வைத் தவிர 

நம்பினோம் யாரை?


மனிதனை மதி இழக்கச் செய்யக் கூடிய இஸ்லாத்திற்கு முரணான மூடக் கொள்கைகளிலிருந்தும் களவு, பொய் முதலான பாவ காரியங்களிலிருந்தும் தவிர்ந்து நடந்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுமாறு மனித சமுதாயத்திற்கு கவிஞர் அறைகூவல் விடுப்பதாக வெலிகம ரிம்ஸாவின் 'பாராமுகம் ஏனோ?' (பக்கம் 109) எனும் கவிதையின் பின்வரும் வரிகள் அமைகிறது. 


மதியை இழக்கச் செய்து 

விதியை மாற்றுகின்ற 

வித்தைகளை - மனிதா 

நீ விட்டுவிடு! 


துணையாய் 

அல்லாஹ்வை ஏற்று 

இணையில்லா அவன் அருளை 

குறைகளின்றி பெற்றுவிடு!


இவ்வாறாக, இஸ்லாத்தின் சிறப்புக்களையும் இஸ்லாம் கூறும் வாழ்க்கையையும், விழுமியக் கருத்துக்களையும் கொண்ட மிகச் சிறந்த சமயசார் கவிதைகள் இந்த 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளன. 

தனது சிந்தனைக் கனதியையும் அவர் தம் புரட்சிகரமான சிந்தனைகளையும் வெளிப்படுப்படுத்த உருவ ரீதியில் புதுக் கவிதையை அதிகம் கையாண்டு இவர் தனக்கே உரிய பாணியில் சிறப்பாகக் கவி புனைந்துள்ளார். தனது நேரகாலங்களை இலக்கியத்துக்காக அர்ப்பணித்து சிறப்பான திட்டமிடல் முறையில் காத்திரமாக இலக்கியப் பணியாற்றிவரும் படைப்பாளி வெலிகம ரிம்ஸா முஹம்மதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!


தர்காநகர் சுமையா ஷரிப்தீன் 

(தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை உதவி விரிவுரையாளர்)


திறனாய்வு : தகவல் பொக்கிஷமாக வெலிகம முஹம்மதின் விடியல் ஆய்வு நூல் - கே.எஸ். சிவகுமாரன்

தகவல் பொக்கிஷமாக வெலிகம முஹம்மதின் விடியல் ஆய்வு நூல் 

- கே.எஸ். சிவகுமாரன்

ஈழத்தில் பிறந்த எழுத்தாளர்களும், இலங்கையில் பிறந்து பிற நாடுகளில் குடிபுகுந்த பல கவிஞர்களும், நம்நாட்டு ஊடகங்களிலும், மின்னியக்க முகநூல்களிலும் நிறையவே  எழுதி வருகிறார்கள். இவர்களுள் கணிசமான எண்ணிக்கையுடையவர்கள் முஸ்லிம் பெண்களாவர். இது வரவேற்கத் தக்க ஒரு போக்கு. அவர்களுள் ஒருவர், வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், "பூங்காவனம்" என்ற சஞ்சிகையை நடத்தி வருபவருமான ரிம்ஸா முஹம்மத் என்பவராவார். இவர் கவிதை, கட்டுரை, கதைகளோடு, நேர்காணல்களையும், திறனாய்வுகளையும் எழுதி வருகிறார். 

இதுவரை 14 நூல்களை எழுதியுள்ளார். அவருடைய நூல்களில் ஒன்று 'விடியல்' (2017) என்பதாகும். வைத்திய கலாநிதி எம்.கே. முகுகானந்தன் இந்த நூல் என்ன கூறுகின்றது? எப்படிக் கூறுகின்றது? ஏன் அப்படிக் கூறுகின்றது? என்பதை அழகாக விபரித்துள்ளார். வாசகர்கள் இவரது முன்னுரையை அவசியம் வாசித்துப் பயன்பெற வேண்டும். 

இந்த நூல், மூதூர் முகைதீன் என்ற கவிஞரின் கவிதைகளை கச்சிதமாக பகுப்பாய்வு செய்கிறது. கவிஞரின் மூன்று கவிதைத் தொகுப்புகளை ரிம்ஸா ஆராய்கிறார். 

ரிம்ஸாவின் தகைமைகள், முகைதீனின் ஆளுமை போன்ற பொருள்கள் பற்றி, ஆசிரியை கிண்ணியா எஸ். பாயிஸா அலி சிறப்பாக எடுத்துக் கூறுகிறார். 

நூலாசிரியர் ரிம்ஸா கூறுகிறார்: "கொழும்பு பல்கலைக் கழகத்தின் இதழியல் டிப்ளோமா பாட தெறிக்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை "விடியல்" என்ற தலைப்பில் சில விடயங்களை சேர்த்தும், சில விடயங்களைத் தவிர்த்தும் இந்நூலை வெளியிடு செய்கிறேன்."

நூலாசிரியர் மொத்தமாக ஐந்து அத்தியாயங்களில் தனது பார்வையைச் செலுத்தியுள்ளார். எவற்றை விரிவுபடுத்தி விளக்கமாக அமைகிறது என்பதையறிய, வாசகர்கள், குறிப்பாக பல்கலைக்கழக, மாணவர்கள் 'விடியல்' என்ற நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும். 

உள்ளடக்கச் சிறப்புகளை நான் வேறு எடுத்துக் கூறுவது அவசியமில்லை. முடிவுரையும், உசாத்துணை நூல்கள், பின்னினைப்புகள் ஆகியனவும் பயன் தருவன. 

மறைந்த திறனாய்வாளரும் (விமர்சகரும் கூட) நாவலாசிரியரும், சஞ்சிகை ஆசிரியருமான க.நா.சு. அவர்களின் கூற்றுக்களை, நூலாசிரியர் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

நூலாசிரியர் தமிழிலக்கியத்தில் புலமை பெற்று உள்ளார் என்பதை விளக்க அவரது கூற்று ஒன்று போதுமானது. அதாவது: 

"தொண்ணூறுகளுக்குப் பின் வந்த கவிதைகளின் போக்குகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்: திராவிட இயக்கத் தாக்கம், இனக் குழு அடையாளம், தொன்மம், மண் சார்ந்த படைப்பு என வெளிப்படும் பின் நவீனத்துவக் கவிதைகள், மண்சார்ந்த கவிதைகள் போன்றனவாகும்."

சில குறிப்பிட்ட தமிழகக்காரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, "சிற்றூர், கிராமம் சார்ந்த வாழ்க்கைச் சித்திரங்கள் நகரமயமாதலின் விளைவு, வாய்மொழி வழக்கில் எழுதும் தன்மை, உள்ளூர் அனுபவங்களை உலகளாவிய போக்குகளுடன் இணைத்தல் எனப் புதிய மாற்றங்களை இக்கவிஞர்களால் தமிழ் கவிதை பெற்றது" என்கிறார் ரிம்ஸா. 

கவிதையின் வெளிப்பாடுகள் என்ற தலைப்பில் தமிழகக் கவிஞர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அவை எனக்குப் பல தகவல்களைத் தருகின்றன. 

அத்தியாயம் 03 இல், கவிஞர் மூதூர் முகைதீன் பற்றிய முழுவிபரங்களும் தரப்படுகின்றன. அதுவே கட்டுரையாசிரியரின் நோக்கமாகும். அக்கவிஞர் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள இந்த ரிம்ஸாவின் நூல் பெரிதும் உதவுகிறது. 

சிறந்த சிங்கள இலக்கிய மொழி பெயர்ப்பாளராகவும், திறனாய்வாளராகவும், கவிஞராகவும், பேச்சாளராகவும் விளங்கும் திக்குவல்லை கமால் பின் அட்டையில் குறிப்பிடும் சில வரிகள் அழகாய் அமைந்துள்ளன. அவர் கூறுகிறார்: 

ரிம்ஸா "வேதனைகளையும் சோதனைகளையும் வென்றபடி, சாதனைகளை அடுக்கிச் செல்லும் அபார திறமைசாலி என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்கிறார். தென்னிலங்கை என்று நாம் கொண்டாட எமக்கிருந்த இடைவெளியை நிரப்பிக் கொண்டு கம்பிரமாக நிமிர்ந்து நிற்கிறார்."

படித்துப் பயன்பெற 'விடியல்' நூலை வாசித்துப் பாருங்கள். 

நன்றி - தினகரன் வாரமஞ்சரி 

Friday, May 13, 2022

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய "எரிந்த சிறகுகள்" நூல் பற்றிய திறன் நோக்கு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய "எரிந்த சிறகுகள்" நூல் பற்றிய திறன் நோக்கு

நூல் விமர்சனம்:- இக்பால் அலி



வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய "எரிந்த சிறகுகள்" என்ற கவிதை நூலை நுகர்ந்து சுவைத்துப் பார்க்கக் கிடைத்தது. பெண்ணினம் அனுபவித்து வரும் சொல்லொண்ணாத் துயரங்களை வெளிப்படுத்தக் கூடிய மிக அருமையான கவிதைத் தொகுதியாக இந்த நூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆணைக் கருவாகச் சுமந்து பெற்றெடுக்கும் பெண்கள், அந்த ஆண்களின் மூலம் பெண்கள் ஈவு இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டு வரும் ஈனச் செயலையும் சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் கவிஞை ரிம்ஸா முஹம்மத் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

உளவியல் ரீதியான கருத்துக்களையும் பெண்கள் அனுபவிக்கின்ற கொடூரமான சீதனப் பிரச்சினைகளையும் ஆண்களினால் ஏமாற்றப்படுதலையும், ஆண்களின் அடக்குமுறைகளையும் பெண்களது ஏக்கங்களையும், நம்பிக்கைகளையும், காதல் உணர்வுகளையும் தமது கவிதைகளின் மூலம் தன்னைப் படைத்து நேசிக்கும் இறைவனிடம் முறைப்பாடு செய்யும் ஒரு முறையீடாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

மனித வாழ்விலிருந்து பெண்களது வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்பட்டு வந்தாலும் சிலவேளை நல்லவர் போல் நடித்து ஏமாற்றும் ஆண்களிடம் சூழ்ச்சி நிறைந்த சதிவலையில் சிக்குண்டு பெண்கள் சிதைந்து, சீரழிந்து சின்னா பின்னமாகிப் போய் விடுகிறார்கள். இன்னும் பெண்கள் ஆண்களின் போகப் பொருளாகவும் விளம்பரக் காட்சிப் பொருளாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். இத்தகைய நிலையில் இருந்து பெண்கள் விடுதலையும் சுகமும் பெற வேண்டும் என்பதைப் பாடுபொருளாகக் கொண்ட இக்கவிதைத் தொகுதியிலுள்ள பல சிறப்பான கவிதைகள் கவிஞை ரிம்ஸாவின் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டைத் தரிசிக்கச் செய்கின்றது. அதேவேளையில் கவிஞையுடைய சில கவிதைகள் சமகாலத்தையும் படம்பிடித்துக் காட்டக் கூடியதாக அமைந்துள்ளன.

செழிப்புடன் வாழ்ந்தோர் முகத்திலெல்லாம்
பட்டினித் துயர்தான் படர்கிறதே
சூழ்ந்தது துன்பம் எமைச் சுற்றி
சுகமது உண்டோ வாழ்க்கையிலே?

'என்ன வாழ்க்கை' (பக்கம் 35) என்னும் தலைப்பில் அமைந்த கவிதையின் சில வரிகளே மேலே தரப்பட்டவையாகும்.

மனித நேயம் என்பது தாம் வாழும் சூழலில் வெறும் கண் துடைப்பாகவே காட்டப்படுகிறது. மனிதர்களுக்கிடையே காருண்யம், அன்பு, பிரியம், சிநேகம் இருத்தல் அவசியமாகும் எனவும் மிருகங்களைப் பலியிடுவது கூடாது எனவும் மேடை போட்டுப் பேசுபவர்கள்தான் மறுபுறத்தில் மனித நேயத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மறைமுகமான முறையில் மனிதக் கொலை வெறியாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மனித நேயம் என்பது முக்கியத்துவமானது. ஆனால் அது தற்காலத்தில் மனிதர்களிடையே வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளிக்கிறது.

கொடூரமான சிந்தனைப் போக்குடையவர்களால் திட்டமிட்ட விதத்தில் மனித நேயம் மனிதச் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டுதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளன. 'மனித நேயம்' என்கின்ற சொல் மிக உயர்வானதும் புனிதத் தன்மை வாய்ந்ததும் ஆகும். மனித நேயம் ஒவ்வொருவருடைய மனதை விட்டும் காணாமல் போகும் அபாயம் உள்ளது. அப்படி நடக்காமல் பாதுகாத்துக் கொள்வது நமது கடமையே. எனவே நாம் இந்த அவல நிலையில் இருந்து மீண்டெழுதல் மிக அவசியம் என்று கவிஞை ரிம்ஸா முஹம்மத் மனம் பதறிக்கொண்டு அவலக் குரல் எழுப்புகின்றார்.

மனித நேயம்
துளியுமற்றவர்களெல்லாம்
அதைப்பற்றி
கதை கதையாய்ப்
பேசுகிறார்கள்..

இது 'ஒப்பனைகள்' (பக்கம் 38) என்னும் தலைப்பில் எழுதிய கவிதையின் சில வரிகளாகும். கவிஞை ரிம்ஸா தனது கவிதையின் மூலம் தம் ஆளுமையை எந்தளவுக்கு ஆழமாகப் பதிவு செய்ய முடியுமோ அந்தளவு ஆழத்திற்கு சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் உயர் நிலையை அடையலாம் என்று சொல்லுமளவுக்கு இவரது கவிதை வரிகளில் யதார்த்த வாதமும் கவித்துவமும் கற்பனை அழகும் உணர்ச்சிச் செறிவும் தனித்துவ முத்திரையும் காணப்படுகின்றன.

இருளின் போர்வைக்குள்
சிக்குப்பட்டுப் போன
சூரியனுக்கே
விடிந்தால்
விலாசம் வருது..

போரின் வடுக்களுக்குள்
அகப்பட்டுப் போன
மக்களுக்கு
எப்போது விலாசம் வரும்?

கவிதை ரிம்ஸா 'காலத்தின் ஓலம்' (பக்கம் 76) என்ற தலைப்பில் எழுதிய கவிதையின் சில வரிகளையே மேலே தரப்பட்டுள்ளது. மிகக் கொடிய போர்க்கால யுகத்தை மீளவும் திரும்பிப் பார்க்கக் கூடியதாக மேலுள்ள கவிதை வரிகள் காணப்படுகின்றன.

போர்க் காலத் தடங்கள் இந்தக் கவிதையில் ஊடாடி நிற்பதைப் பார்க்கின்ற போது நெஞ்சோடு அணைத்துக்கொள்ள முடிகின்றது. வாசித்த உடனே நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. ஆரம்பத்திற்கு முடிவொன்று இருப்பது போல, இருட்டுக்கு வெளிச்சம் இருப்பது போல போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நெஞ்சோடு உள்ள வடுக்களை இல்லாமல் செய்வதற்கு என்னதான் வரப்பிரசாதங்களை அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொட்டினாலும் அவை ஒருபோதும் மறக்க முடியாத வடுக்களே என்கிறார் கவிஞை. கையில் சூரியனைவிடப் பெறுமதியான செல்வத்தைக் கொண்டு வந்து கொடுத்தாலும் போரினால் காயப்பட்ட மக்கள் எந்தவொரு வரப்பிரசாதத்தையும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஏனென்றால் இந்த கண் துடைப்பெல்லாம் அவர்களின் துயரங்களைத் துடைத்தெறியாது என்பதனாலாகும்.

தனக்கே உரிய பாணியில் திரும்பத் திரும்ப வாசித்து நினைவில் மறக்காமல் வைத்திருக்கின்ற கவிதைகளை எரிந்த சிறகுகள் கவிதை நூலில் பரவித்; தந்துள்ளார் கவிஞை ரிம்ஸா.

பச்சையணி தேயிலை மலையில்
இச்சையோடு துரையிருப்பான்
கொழுந்தை பெண்கள் பறித்தாலும்
கொடும் பேச்சால் துளைத்தெடுப்பான்..

'முகவரி தேடும் மலையகம்' (பக்கம் 120) என்னும் தலைப்பில் எழுதிய மிக அருமையான கவிதையின் வரிகளே இவையாகும்.

மலையகப் பெண்கள் தம் உடலின் வியர்வைத் துளிகளை உதிரமாக நீர் பாய்ச்சி தேயிலைக் கொழுந்துகளைப் பறிப்பவர்கள். சிலவேளைகளில் துரைமார்களுடைய பார்வையில் போகப் பொருளாகவும் பார்க்கப்படுவாள். அவள் உடல் அட்டை கடிக்கும் கடுமையான வேலைப் பணிக்கும் கடுமையான வெயிலுக்கும் கடுமையான குளிருக்கும் உள்ளாகித் தம் உடல் அமைப்பிலும் வேறுபடுத்திக் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். கங்காணிமார் அல்லது துரைமார்களுடைய சினச் சொற்கள் தினசரி காதுகளில் உள்வாங்கப்பட்டு அவ் விசக் கருத்துகள் எவ்வளவுதான் மனதில் தைத்துக் கொண்டிருந்தாலும் சரி, தம் உடலில் எவ்வளவுதான் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும் சரி அதற்கு மாறாக அவர்கள் அந்த வலிகளை உதிர்த்துவிட்டு மனம் நொந்து, வெந்து பழக்கப்பட்ட இந்த மலையகப் பெண்கள்தான் இந்நாட்டுக்கு தேயிலையின் மூலம் அந்நியச் செலாவணியை அதிகம் பெற்றுத் தருபவர்கள். இப் பெண்கள்தான் இந்நாட்டின் விலையும் மதிப்பும் அழகும் மிக்கவர்கள் என்பதன் காட்சிகளைத் தம் கவிதைகளில் கவிஞை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

ஆக, பெண்களது சமூக முன்னேற்றத்துக்கும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமனாகப் பயணம் செய்ய வேண்டும் என்று துடிக்கும் இளம் சந்ததியினர்களுக்கும் "எரிந்த சிறகுகள்" என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் நல்ல பாடுபொருள்கள் உள்ளன.

கலாநிதி துரை மனோகரன் எழுதிய முன்னுரையில் 'இக்     கவிதைத் தொகுதியில் 54 கவிதைகளும் 7 மெல்லிசைப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு விடயங்கள் பற்றிப் பேசுகின்றன. ஆன்மிகம், சமுதாய விமர்சனம், நாட்டு நிலைமை, காதல் உணர்வுகள், தனிமனித உணர்வுகள், தனிமனித மேம்பாடு, பெண்ணியம், தொழிலாளர் நிலைமை, ஏழ்மை, அறிவுரை முதலான பல விடயங்கள் ரிம்ஸாவின் கவிதைகள் தொட்டு நிற்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலுக்கான அணிந்துரையை வைத்திய கலாநிதி கவிஞர் தாஸிம் அகமது முன்வைத்துள்ளார். அடுத்து இந்நூல் பற்றி கவிமணி என். நஜ்முல் ஹுஸைன் குறிப்பிடுகையில் 'வாசிப்போர் இலகுவில் புரிந்துகொள்ளும் வகையில் கவிதை படைப்போர் தமது முயற்சிகளிலே வெற்றி பெறுகின்றனர். தமக்கும் புரியாது வாசிப்போரையும் குழப்பம் கவிதை நூல்கள் வாசகர்களால் புறந்தள்ளப்படுகின்றன. அந்த வகையில் மிகவும் இலகுவான சொற்களினால் தனது கவிதைகளை ஆக்கியுள்ளார் கவிதாயினி ரிம்ஸா முஹம்மத்' என்று தமது கருத்துரையில் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துரையினைத் தேசிய கல்வி நிறுவகத்தின் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆசிரியரும் கண்டி கல்வி வலய ஆசிரியர் ஆலோசகருமான திருமதி. ரதி. தேவ சுந்தரம் வழங்கியுள்ளார். அழகிய அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்த நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் முன்வைத்துள்ளார். கவிஞை ரிம்ஸாவின் பணி தொடர வாழ்த்துகிறேன்!!!


நூல் - எரிந்த சிறகுகள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - கொடகே பதிப்பகம்
விலை - 400 ரூபாய்


நூல் விமர்சனம்:- இக்பால் அலி

Wednesday, November 11, 2020

2020.08.30 தினகரன் வாரமஞ்ரியுடன் வெளிவரும் இணைப்பிதழான செந்தூரம் இதழில் எனது அட்டைப் படம் தாங்கி வெளிவந்தத நேர்காணல்.

2020.08.30 தினகரன் வாரமஞ்ரியுடன் வெளிவரும் இணைப்பிதழான செந்தூரம் இதழில் எனது அட்டைப் படம் தாங்கி வெளிவந்தத நேர்காணல்.

நன்றி - கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம்


தெற்கிலிருந்து ஒரு பெண் ஆளுமை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

(ஓர் எழுத்தாளர். இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், விமர்சகர், சஞ்சிகையாசிரியர்  மற்றும் ஊடகவியலாளர்)


செந்தூரம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர். இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

பாய்ந்தோடும் இயற்கை எழிலாய் நில்வளா கங்கையும் நீலவானின் நிறத்தையொத்த அழகிய கடலும் கொண்டமைந்த இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள வெலிகமையே எனது பிறப்பிடமாகும். இந்த ஊரின் நாமத்தை எனது பெயரோடு இணைத்து, வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரில் எழுதி வருகின்றேன்.

2004 ஆம் ஆண்டு தினமுரசுப் பத்திரிகையில் நிர்மூலம் என்ற கவிதையை எழுதியதைத் தொடர்ந்து 17 ஆண்டுகளாக எழுதி வருகின்றேன். இதுவரை 13 நூல்களை வெளியிட்டுள்ளேன். இவை கணக்கீடு, கவிதை, நூல் விமர்சனம், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள், ஆய்வு ஆகிய வகைகளிலான நூல்களாகும்.

அகம் சார்ந்தவை, பெண்ணியம், நட்பு, சமூக அவலம், சீதனக் கொடுமை, போர்ச் சூழல், போரின் அவலங்கள், நாட்டு நடப்புகள், உலக நடப்புகள், உறவுகளின் விரிசல், தனிமனித வாழ்வு, சமூக அக்கறை, மானிட நேயம், இயற்கையின் வனப்பு, இயற்கை அனர்த்தங்கள், போதையின் அவலம், வறுமைப் புயல், சுயநல உறவுகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஜீவகாருண்யம், ஆன்மீகம் போன்றவற்றைப் பாடுபொருள்களாகக் கொண்டே எனது படைப்புக்கள் அமைந்துள்ளன.


இலக்கியத் துறையில், உங்களுக்கு எப்படி நாட்டம் ஏற்பட்டது? அந்த முதல் அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளலாமே?

வாசிப்பு அனுபவம்தான் என்னை ஓர் எழுத்தாளராக உருவாக்கியது. நான் பத்திரிகை உலகத்தையோ அல்லது எழுத்துத் துறையையோ அறிந்திருக்கவில்லை. எதுவும் தெரியாமல்தான் வாசிக்க ஆரம்பித்தேன்.

நான் வாசிக்க ஆரம்பித்த காலங்களில் எமது உறவினரான மாமா ஒருவர் அந்தக் காலத்தில் ஒரு பிரபல்யமான எழுத்தாளராக இருந்தார். அவரது பெயர் எஸ்.ஐ.எம். ஹம்ஸா என்பதாகும். அக்காலத்தில் அவர் திக்குவல்லை ஹம்ஸா என்ற பெயரில் தனது படைப்புக்களை பத்திரிகைகளில் களப்படுத்தி வந்தார். இந்த மாமாவே தனது சிறுகதைகளை எனக்கும் வாசித்துக் காட்டி, என்னை இத்துறையில் ஈடுபாடு காட்ட ஒரு அடிக்கல்லை நாட்டினார். நிச்சயமாக இந்த மாமா இன்று உயிரோடு இருந்தால் என்னைப் பார்த்து மிகவும் சந்தோசப்படுவார். அவரின் இழப்பு இன்றும் எனக்கு ஆ(மா)றாத வடுவாகவே உள்ளத்தில் பதிந்துள்ளது.

2004 ஆம் ஆண்டில் திக்குவல்லை ஸப்வான் என்ற ஆசிரியரே முதன் முதலில் என்னைப் பற்றிய அறிமுகத்தை தினகரனின் இணைப்பிதழான செந்தூரத்தில் இடம்பெறச் செய்து, என்னை ஊக்கப்படுத்தினார்.


நீங்கள் இதுவரை எழுதி வெளியிட்ட நூல்கள் எவை? அவை, வாசகர்கள்; மத்தியில் எந்தளவு வரவேற்பைப் பெற்றுள்ளன?

இதுவரை நான் மொத்தமாகப் 13 நூல்களை நான் வெளியிட்டுள்ளேன். அதாவது தென்றலின் வேகம் (2010), எரிந்த சிறகுகள் (2015) என்ற இரண்டு கவிதை நூல்களை நான் வெளியிட்டுள்ளேன். அவை இளசுகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளன. அவர்கள் ஒத்த மன நிலையில் கவிதைகளை வாசித்ததாகவும், ஒரே மூச்சாக புத்தகம் முழுவதையும் வாசித்து முடித்ததாகவும் கூறியதைக் கேட்டு மன நிறைவு கொண்டேன்.

கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை (2013) மற்றும் அறுவடைகள் (2015) என்ற இரண்டு நூல் விமர்சனங்கள் அடங்கிய நூல்களை நான் வெளியிட்டுள்ளேன். இந்த இரண்டு நூல்களைப் பற்றிச் சொல்லும் போது மூத்த எழுத்தாளர்கள் பலர் தங்களது நூல்களுக்கு, நானே நூல் விமர்சனம் எழுத வேண்டும் என்று விரும்பி, என்னிடமே அவர்களது நூல்களைத் தருகின்றார்கள். கிட்டத்தட்ட நான் இன்றுவரை எழுதிய நூல் விமர்சனங்கள் சுமார் 150 போல் இருக்கும். மூத்த எழுத்தாளர்கள் தொடக்கம் இளம் எழுத்தாளர்கள் வரை பாகுபாடின்றி நூல் விமர்சனங்களை எழுதியுள்ளேன். இத்துறையில் ஈடுபாடு காட்ட விரும்புபவர்கள் எனது நூல்களை வாசிப்பதன் மூலம் பல எழுத்தாளர்களது நூல்களை வாசித்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிறுவர் இலக்கிய நூல்கள் பற்றிச் சொல்லும் போது எனது நான்கு சிறுவர் கதைகளடங்கிய நூல்களை ரூம் டு ரீட் நிறுவனம் பிரசுரித்து வெளியீடு செய்துள்ளது. அவை ஆடம்பரக் கூடு (2012), என்ன கொடுப்போம்? (2012), பாடல் கேட்ட குமார் (2013), இதுதான் சரியான வழி (2013) ஆகியனவாகும். கூடுதலாக இலங்கையின் நாலா புறங்களிலும் உள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகள் சகலதிலும் எனது இந்த நூல்கள் மாணவர்களது வாசிப்புக்காக வைக்கப்பட்டுள்ளன. அதுபோல எனது சிறுவர் பாடல் நூலான வண்ணாத்திப் பூச்சி (2014) என்ற நூலை வெளியீடு செய்ய இலங்கை நூலக ஆவணவாக்கல் சபை அனுசரணை வழங்கியது. இந்த நூலை இலங்கைக் கல்வி அமைச்சின், நூல் அபிவிருத்தி சபையானது பாடசாலைகளுக்குப் பொருத்தமான நூலாக அங்கீகரித்துள்ளது.

விடியல் (2017) என்ற ஆய்வு நூலானது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நான் இதழியல் கற்கும் போது சமர்ப்பித்த ஆய்வாக அமைகிறது. இந்த நூலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் என்னிடம் கேட்டு பார்வையிடுகின்றார்கள். ஒரு ஆய்வு நூல் எப்படியிருக்க வேண்டும் என்ற அறிமுகத்தை இந்த நூல் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்வதாக அறிந்து கொண்டேன்.

எனவே எந்த வகையான நூலாக இருந்தாலும் அவை பலருக்கும் பல வகைகளில் மிகுந்த பிரயோசனம் உடையதாக அமைய வேண்டும். இப்படியான நூல்கள் தான் காலத்தின் தேவையாக உள்ளது என்று நினைக்கின்றேன்.


"நூல் வெளியீடு" என்ற விடயத்தில் ஓரு படைப்பாளி சந்திக்கும் சவால்கள்?

நூல்களை வெளியிடுவது என்பது ஒரு எழுத்தாளன் தன் எதிர்காலத்தை அடகு வைப்பதற்கு ஒப்பானது. சுமார் 500 பிரதிகளை அச்சிடுவது என்றாலே 80,000 ரூபாவுக்கு மேல் செலவு காத்திருக்கின்றது. அதையும் தாண்டி நூல் வெளியீட்டுக்காகவும், மண்டப வாடகை, அழைப்பிதழ், இத்தியாதிகளுக்காகவும் ஒரு தொகை செலவு காத்திருக்கின்றது. காசு என்ற விடயத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் விழாவுக்கு வருகை தருவோர் பற்றிய எண்ணம் பயத்தில் ஆழ்த்தி விடுகின்றது. இதுவும் அல்லாமல் அழைப்பிதழ்கள் இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டு விழாவுக்குப் பின்னர் கிடைக்கக் கூடிய துரதிர்ஷ்ட வசமான சூழ்நிலையும் காணப்படுகின்றது. 

அத்துடன் அழைப்பிதழில் பெயர் குறிப்பிடப்படுபவர்களின் பட்டம் பதவிகள் குறிப்பிடப்படாத பட்சத்தில் குறிப்பிட்ட சிலர் விழாவுக்கே வருகை தரமாட்டார்கள். வேறு சிலர் அழைப்பிதழில் தனது பெயர் குறிப்பிடப்படவில்லை என்று வருகை தர மாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களின் பெயர் அழைப்பிதழில் இருந்தால் இன்னும் ஒரு வகையினர் நிகழ்வுக்கு வருகை தரமாட்டார்கள். இவ்வகையான சவால்களையெல்லாம் தாண்டி ஒரு நூல் வெளியீடு சிறப்பாக இடம்பெற்றால் அது அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாகும்.


பூங்காவனம் சஞ்சிகை தொடங்க உந்துதலாய் அமைந்த விடயம் எது?

மல்லிகை, ஞானம் போன்ற சஞ்சிகை கள் அந்நாட்களில் மிகவும் பிரபல்யம் பெற்றவையாக இருந்தது. ஞானம் சஞ்சிகை எனக்கு அறிமுகமான புதிதில் மாதா, மாதம் ஒரு எழுத்தாரை அறிமுகப்படுத்தி, அவரது கவிதையையும் பிரசுரித்து வந்தது. அதில் எனது அறிமுகமும் எனது கவிதையும் பிரசுரமாகியது. அந்த மகிழ்ச்சியை இன்றும் அளவிட்டுச் சொல்ல முடியாது. எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை எனது எழுத்தாள நண்பர்களுக்கும் வழங்கினேன். அதாவது அவர்கள் பற்றிய அறிமுகத்தையும், அவர்களது கவிதையையும் பிரசுரமாக நான் உதவியாக இருந்தேன்.

2004 ஆம் ஆண்டு தினமுரசுப் பத்திரிகையில் நிர்மூலம் என்ற எனது கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து எழுத்துத் துறையில் 17 வருடங்களைக் கடந்து நின்றாலும் ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த களங்கள் மிகவும் பெறுமதியானவை. அவையே என்னை ஊக்குவித்தன.

என்றாலும்  புதிய எழுத்தாளர் களுக்கு வாய்ப்புக் குறைவாக அமைந்ததைக் காணமுடிந்தது. அதன் விளைவால் 2010 ஆம் வருடம் பூங்காவனம் என்ற சஞ்சிகையைத் தொடங்கி அதில் மூத்த எழுத்தாளர்களின் படைப்புக்களையும் உள்வாங்கி, கூடுதலாகப் புதிய எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தேன்.


இப்படைப்புலகில் தனித்துவமாக சளைக்காமல் பயணிக்கும் தங்களின் வெற்றியின் ரகசியம் என்ன?

ஒரு கலைஞன், அல்லது கவிஞன் முதலில் மனிதனாக இருக்க வேண்டும். ஓவ்வொரு கலைஞனும் மனிதனை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மனிதாபிமானத்தோடு செயற்பட வேண்டும். நாம் உலகத்தில் பல செல்வங்களைச் சேமித்தாலும் மனிதர்களின் அன்பை, மதிப்பை சேமிக்காவிட்டால் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்காது. எனவே நான் நேசிக்கும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை எமது எழுத்துக்களினூடாக பிரதிபலிக்கின்றபோது அது அவர்களுக்கு ஆறுதலாகவும் மற்றவர்களுக்கு பாடமாகவும் அமைந்து விடுகின்றது. 

நாம் எழுதும் படைப்புக்கள் நூலுருவாக்கம் பெற்றால்தான் அது காலத்தால் நிலைத்திருக்கும். ஆதனால் நான் எழுதும் படைப்புக்களை நூல்களாக வெளியிடுவதில் கரிசனை காட்டி வருகின்றேன். அவ்வாறு நூல்களை வெளியீடு செய்யும் போது அதனை வாசிப்பவர்கள் தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் என்னை வாழ்த்துகின்றார்கள். 

மேலும் எனது நூல்களை வெளியீடு செய்யும் போது ஏற்படுகின்ற பல சிக்கல்களையும் சவால்களையும் சமாளித்து அவற்றை சிரமமாக நினைக்காமல் பொறுத்துக்கொண்டு தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றேன்.

எனது நூல் வெளியீடுகள் சிலவற்றின் முதற்பிரதிகளை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பெற்று என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். அதேபோன்று எனது நூல் வெளியீடுகளின் போது என்னையும், என் எழுத்துக்களையும் நேசிக்கும் நல்ல உள்ளங்கள் சிரமம் பாராமல் வருகை தந்து எனக்கு உதவிக் கரம் நீட்டுகிறார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் என் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளுக்கு வருகை தர முடியாதவர்கள் கூட பிரிதொரு தினத்தில் என் நூல்களை வாங்கி உதவி செய்கின்றார்கள். 

பத்திரிகைகள், சஞ்சிகைகள், வலைத்தளங்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எனது படைப்புக்களுக்கு களம் தந்து என்னை ஊக்குவிக்கின்றார்கள். இவ்வாறான சகல விடயங்களுமே எனது வெற்றிக்கான தூண்களாகும்.


இலக்கியம், பத்திரிகை தவிர, மற்ற துறைகளில் உங்களுக்கிருக்கும் ஆர்வம் பற்றி..?

கணக்கீட்டுத் துறையில் உயர் தரம் கற்றதால் கணக்கீட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்த ஈடுபாட்டின் காரணமாக பாடசாலை மாணவர்களை நோக்கியதாக கணக்கீட்டுத் துறையில் மூன்று நூல்களை என்னால் வெளியிட முடிந்தது. இந்த நூல்கள் அந்தப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரவாதமாகவே அமைந்துள்ளன. அத்துடன் கொரோனாக் கால விடுமுறையில் அடிப்படைக் கணக்கீடு என்ற புதிய நூலொன்றையும் தயார் செய்தேன் இதனையும் விரைவில் வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக இந்த நூலும் கணக்கீடு பாடம் கற்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


உங்கள் வாழ்க்கையில் ரோல் மாடலாக நினைப்பது யாரை?

அவ்வாறு குறிப்பாக சொல்வதற்கு யாருமில்லை. ஒவ்வொரு விடயங்களிலும் பலதரப்பட்டவர்களை முன்னுதாரணமாகக் கொள்கின்றேன் அவ்வளவே. புதுக் கவிதைகளைப் பொறுத்தவரை கவிஞர் மு. மேத்தா அவர்களின் கவிதைப் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். சிறுகதைகளைப் பொறுத்தவரை திக்குவல்லைக் கமால் அவர்களின் சிறுகதைகளின் உள்ளடக்கம் மற்றும் பேச்சு வழக்கு மிகவும் பிடிக்கும். நூல் விமர்சனங்களைப் பொறுத்தவரையில் கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் திறனாய்வுப் போக்கு மிகவும் பிடிக்கும். இப்படிச் சில துறைகளில் சிலரை முன்னுதாரணமாகக் கொள்கிறேன்.


மலையகத்தை பொறுத்தவரையில் எழுத்தாளர்களின் பங்களிப்பு, வளர்ச்சி, அவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் பற்றி கூறமுடியுமா?

மலையகத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் கொடி கட்டிப் பறக்கின்றார்கள். அவர்களின் ஆத்திரமெல்லாம் இன்று முன்னேற்றங்களாக மாறி வருவது ஆரோக்கியமானது. தலைநகரில் வீட்டு வேலைகளுக்காக ஒது(டு)க்கப்பட்டவர்கள் இன்று பல உயர் பதவிகளை வகிக்கின்றார்கள். மலையக எழுத்தாளர்களின் வளர்ச்சிக்காக பல மலையக அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. அவை மலையக எழுத்தாளர்களுக்காக போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்றன.


இன்றைய பெண்கள் சமுதாயம் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினை எது? உங்கள் பார்வையில் அதற்கான தீர்வு என்னவென நினைக்கிறீர்கள்?

தற்காலத்தைப் பொறுத்தவரை பொது வெளியில் பேசக் கூடிய அல்லது பேச வேண்டிய ஒரு விடயமாக பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு முக்கிய இடம்பெறுகிறது. குறிப்பாக தொழிலுக்குச் செல்லும் பெண்கள் பஸ்களிலும், அலுவலகத்திலும் மட்டமான சில ஆண்களின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. பலர் எதிர்த்தும் சிலர் வெளியே சொல்ல முடியாமல் கண்ணீரோடும் வாழ்கிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தளவில் சொந்த பந்தத்திலுள்ள சில ஆண்கள், சில ஸ்கூல் சேர்விஸ் சாரதி, சில ஆண் ஆசிரியர்கள் போன்றவர்களின் தகாத தொடுகைகளுக்கு உள்ளாகி சில குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லப் பயந்து ஒரு வகையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.

எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் தைரியமாக தம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அலுவலகங்களில் தம் சக பெண் ஊழியர்களிடம் தமக்கு நடந்த அநீதியைத் தெரிவித்து அவர்களையும் பாதுகாக்க வேண்டும். அத்துடன் பெண் மேலதிகாரிகளிடமும் இதுபற்றி முறையிட வேண்டும். குழந்தைகளுக்கு ஷகுட் டச்|, ஷபேட் டச்| சொல்லிக்கொடுப்பதைவிட ஷடோன்ட் டச்| என்று சொல்லிக் கொடுங்கள். பெண் பிள்ளைகள் ஆண் நண்பர்களுடன் பழகுவதை பெற்றோர்கள் கண்டிப்பாக அவதானியுங்கள். மிக முக்கியமாக ஸ்மார்ட் போன்களை பிள்ளைகளுக்கு கொடுக்காதீர்கள். அதேபோன்று தற்காலத்தைப் பொறுத்தவரை பெண் பிள்ளைகளுக்குப் போன்றே ஆண் பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.


எழுத்துத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

பொதுவாக பெண்கள் என்று நோக்குமிடத்து தமது கலாசாரத்தை சீரழித்துக் கொண்டு யாரும் எழுத முன்வரக் கூடாது. ஏனெனில் நமது வாழ்க்கை பூஞ்சோலையில் ரோஜாக்கள் பூத்துக் கொண்டிருக்கும்போது நாம் எமது எழுத்துக்களினூடாக ஏன் முட்களைத் தேடிக்கொள்ள வேண்டும்? 

வரம்பு அல்லது வரைமுறைகள் என்பதெல்லாம் பெண்களை முடக்கிப் போடுபவை என்ற சிந்தனையிலிருந்து விடுபடுங்கள். உண்மையில் அந்த வரைமுறைகள் எமக்கு முன்னோர்கள் போட்டுவிட்ட முள்வேலி. முள்வேலியைப் பயிர்கள் கடந்தால் அவை காளைகளின் பசிக்கு இரையாக நேரிடும். எனவே எமக்கென்றொரு பாதையை நாம் போட்டுக்கொள்வதில் தவறில்லை. அதில் தனித்துவம் இருக்க வேண்டுமே தவிர ஒழுக்க வரைமுறைகளைத் தவறிவிடக் கூடாது.


இலக்கியத் துறையில் உங்களது நோக்கம் என்ன?

என் வாழ்வில் நான் கண்ட முதல் சோகம் 2003 இல் எனது தாயார் இறையடி சேர்ந்ததுதான். அதிலிருந்துதான் எனது இதயத்தின் ஓசைகளைப் பாஷைகளாக நான் மொழி பெயர்த்தேன். கவி வடித்தேன். அவ்வாறு எழுதும்போது எனது நோக்கம் என் துயரத்தை காகிதத்துக்கும் சுமக்கக் கொடுப்பதுதான். ஆனால் காலவோட்டத்தினால் கவிதையின், இலக்கியத்தின் போக்கு என் மனதில் ஒரு ஆறுதலையும் தேறுதலையும் தந்ததுண்மை. அந்த மாறுதலினால் என் சிந்தனை இலக்கியத்தில் சிக்கிக் கொண்டது. 

அதன் பின்னர் நான் கடந்து வந்த காலத்தில் பல சம்பவங்கள் எனக்கு படிப்பினையாக அமைந்தன. சிலரது வாழ்க்கை எனக்கு பாடமாக அமைந்தது. அவற்றையெல்லாம் அவதானித்து அந்தப் பிரச்சினைகளில் மற்றவர்கள் சிக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலும், யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும் பேனா என்ற ஆயுதத்தை ஏந்தினேன். சமூகத்துக்கு எதிராகச் செயற்படும் விடயங்களுக்காக அந்தப் பேனாவை வாளாக மாற்றினேன். எனது நோக்கம் ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் வாசிப்பவரின் இதயத்தைத் தொட வேண்டுமென்பதே தவிர சுட வேண்டும் என்பதல்ல.


நூற்றுக் கணக்கானவர்களை நீங்கள் பத்திரிகை, சஞ்சிகை, இணையத் தளங்கள் வாயிலாக நேர்காணல் செய்துள்ளீர்கள். உங்களது அறிமுகம் மற்றும் நேர்காணல்கள் ஊடகங்களில் வெளிவந்தது தொடர்பாகப் பகிர்ந்து கொள்ளலாமே?

திக்குவல்லை ஸப்வான் என்ற ஆசிரியரே முதன் முதலாக என்னைப் பற்றிய அறிமுகத்தை தினகரனின் இணைப்பிதழான செந்தூரத்தில் முதன் முதலில் (2004.07.04) இடம் பெறச் செய்து என்னை ஊக்கப்படுத்தினார். அதைத்தொடர்ந்து இன்றுவரை 25 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சிகளில் வந்துள்ளது. 

ஊவா சமூக வானொலியில் நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் எனது நேர்காணல் ஒலிபரப்பப்பட்டுள்ளன. சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஒலிபரப்பான இந்த நேர்காணலை பாத்திமா ரிஸ்வானா செய்தார். இந்த நேர்காணல் மூலமே எனக்குத் தாராளமாகக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள அவகாசம் கிடைத்தது.

பிரான்ஸிலிருந்து வெளிவரும் தமிழ் நெஞ்சம் சஞ்சிகையின் 2020 ஜுன் மாத இதழிலும் எனது நேர்காணல் வெளிவந்தது.


இலக்கியத் துறையில் உங்களால் மறக்க முடியாத சம்பவம்?

விருது வழங்கும் ஒரு தனியார் அமைப்பு, பத்திரிகைகளில் ஆய்வு நூல் மற்றும் மொழி பெயர்ப்பு நூல் போன்றவற்றுக்கு விருது கொடுப்பதாக தகவல் தந்து, நூல்களை அனுப்பி வைக்கும்படி கோரியிருந்தார்கள். அதற்கிணங்க நானும் எனது விடியல் நூலைக் குறிப்பிட்ட அமைப்புக்கு நேரில் கொண்டு போய்க் கொடுத்தேன். சில நாட்களில் தொடர்பாளர் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஒரு இலக்கிய நிகழ்வைக் குறிப்பிட்டு அதற்கு வருமாறும், நிகழ்வு முடிந்த பின்னர் விடியல் நூல் பற்றிக் கதைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதன்படி நானும் குறிப்பிட்ட நிகழ்வுக்;குச் சென்றிருந்தேன்.

அந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர், தொடர்பாளர் என்னை ஒரு தனிப்பட்ட ரீதியாக நேர்காணல் செய்தார். இந்த நேர்காணலில் முழுக்க, முழுக்க எனது வருமானம், குடும்பப் பொருளாதார நிலைமை, தந்தையின் தொழில், ஆண் சகோதரர்களின் தொழில், அதிலும் வெளிநாட்டில் யாராவது குடும்பத்தவர்கள் வசிக்கின்றார்களா போன்ற கேள்விகள் முக்கிய பேசு பொருளாக அமைந்தன. அவர் எதிர்பார்த்த கேள்விகளில் அவருக்கு சாதகமாக எந்தப் பதிலும் அமையவில்லை.

நான் மிகவும் வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் உண்மையைச் சொன்னேன். அவரைப் பொறுத்தவரை அந்த நேர்காணலில் நான் தோல்வியடைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆகக் குறைந்தது அவரது பெயரை எனது விடியல் நூலில் குறிப்பிடவில்லை என்றும் கடிந்துகொண்டார்.

என்ன ஆச்சரியம் எனது விடியல் நூல் தேர்வுக் குழுவுக்கே போகவில்லை. இதுபற்றி மிகவும் உறுதியாகத் தெரிந்து கொண்ட நான், அவரிடம் எனது நூல் தொடர்பாக வினவினேன். அவர் மிகவும் காரசாரமாகப் பேசினார். உங்கள் நூலை தேர்வுக் குழுவுக்குப் அனுப்புவோம் அல்லது அனுப்பாமல் விடுவோம். அதனை முடிவு செய்வது நாங்கள். மட்டுமல்லாமல் நாங்கள் நினைத்தவர்களுக்குத்தான் விருதும் கொடுப்போம் என்று குறிப்பிட்டார். இதனை ஒரு கேள்வியாக கேட்டுக்கொண்டு நீங்கள் வருவது தான் சரியில்லை என்று கடுமையாகக் கடிந்துகொண்டார். 

அவர்கள் விரும்பியவர்களுக்கு விருதுகளைக் கொடுக்கட்டும். அதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. ஏன் அதனைப் பத்திரிகையில் விளம்பரம் செய்து, பொதுமைப்படுத்திக் காட்டி, உலகை ஏமாற்றுகிறார்கள்? 

பின்னர் எனது இந்தப் பிரச்சினையை நான் அமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்தினேன். அமைப்பின் தலைவரும், தொடர்பாளர் பேசியது போலவே என் கார், என் பெற்றோல், என் விருப்பம் என்ற அதிகாரத் தோரணையில்தான் பேசினார்.

சத்தியமாக எனக்கு விருது கிடைக்கவில்லை என்பது எனது கவலையல்ல. எனது நூல் தேர்வுக் குழுவுக்குப் போய், விருது கிடைக்காமல் இருந்தால் அது நியாயமானதே. அந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் ஒருவரும் எனது நூலைக் கண்ணாலும் காணவில்லை என்பதுதான் எனது வருத்தம். இப்படியான ஒரு போலிக் கும்பலுக்கு எனது நூலைக் கொடுத்தேன் என்று நினைக்கையில்தான் கவலையாக இருக்கிறது.

நூல் தரமாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குறிப்பிட்ட நபரை ஏதோ ஒரு (பொருளாதார) காரணத்துக்காக பிடித்திருந்தால் விருது கொடுப்பார்கள். இப்படி விருதுகள் பற்றி பலரும் பலதையும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்த ஒரு புதுமையான அனுபவம். இந்த நிகழ்வை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.

இப்படித்தான் 2018 இல் முகநூல் நுட்(அற்)பமான குழுமமொன்று விழாவமைத்து எனக்கு ஷஷகலைப்பொழில்|| நுட்ப விருது தருவதாக அறிவித்து மூன்று மாதம் முகநூலில் பதிவுகள் போட்டு அமர்க்களப்படுத்தினார்கள். இவர்களை நம்பி பலரும் வெளிநாட்டிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். அவர்களிடம் நன்கொடையென்று சொல்லி பணம் எடுத்திருக்கிறார்கள். இறுதியில் விருது தயாரிப்பில் தாமதமாகி விட்டதென்று சொல்லி அவர்களைச் சமாளித்திருக்கிறார்கள். பெரும் செலவு செய்து இந்த விருது விழாவுக்காகவென்றே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மிகவும் வேதனைப்பட்டதாக பின்னர் நான் கேள்விப்பட்டேன். 

ஆகக் குறைந்தது எனக்கு ஒரு அழைப்பிதழையாவது இவர்கள் அனுப்பி வைக்கவில்லை. மட்டுமல்லாமல் அந்த குழுவினர் எனக்கு எந்த விதமான விருதுகளையும் இதுவரை அனுப்பி வைக்கவில்லை. இப்படியான அமைப்புகள் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவது கேவலமாக இல்லையா? எனது பெயரை, எனது அனுமதியில்லாமல் பேஸ்புக்கில் விருது கொடுப்பதாகப் போட்டு, அவர்களது நிகழ்வை கௌரவப்படுத்திக்கொள்ளும் அவர்கள் இனியாவது திருத்திக்கொள்ள வேண்டும்.


நீங்கள் இதுவரை சாதித்ததும், சாதிக்க நினைப்பதும்?

2010 இல் பூங்காவனம் இலக்கிய வட்டத்தை நிறுவி, அதன் மூலம் இதுவரை 37 பூங்காவனம் காலாண்டு சஞ்சிகைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டிருப்பதைப் பெரும் சாதனையாகவே நினைக்கின்றேன். ஏன் என்றால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு விளம்பரங்களைத் தேடுவதிலுள்ள சிக்கல், ஆக்கங்களைக் குறிப்பிட்ட காலத்துக்குள் தட்டச்சு செய்து கொள்வது, அச்சகங்களின் தாமதம் போன்றவற்றைத் தாண்டி குறிப்பிட்ட காலத்துக்குள் சஞ்சிகையை வெளியிடுவது ஒன்றும் அவ்வளவு இலேசான காரியமல்ல. எனவே அதை நான் சீராக வெளியிட்டு வருவதே ஒரு சாதனை என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

ஒரே துறையில் அல்லாது கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் இலக்கியம், ஆய்வு போன்ற பல தளங்களிலும் இலக்கியம் படைப்பதோடு மேலதிகமாக கணக்கீட்டுத் துறையையும் இணைத்து இதுவரை 13 நூல்களை வெளியிட்டிருப்பதும் என்னைப் பொறுத்த அளவில் ஒரு சாதனையாகவே நினைக்கிறேன்.

கணினி வடிவமைப்பும் முழுமையாக செய்த நிலையில் அச்சுக்குத் தயாராக இருக்கும் இன்னும் 5 நூல்களை எதிர்காலத்தில் ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும்.


ஊடகத் துறையிலும், இலக்கியத் துறையிலும் கால் பதிக்க ஆர்வத்துடன் காத்திருக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

இலக்கியம் என்பது ஒரு அழகான பூஞ்சோலை. அதிலே பலர் தேனெடுத்துக் கொண்டிருப்பார்கள். சிலரோ அப்பூஞ்சோலையை அழிக்க வாளெடுத்துக் கொண்டிருப்பார்கள். இலக்கியத் துறையில் சாதிப்பதற்கு பலர் எமக்கு கைகொடுத்தாலும் சில நேரங்களில் வெட்டுக் கொத்துக்கள் நிறைய இடம் பெறும். முதலில் அவற்றை எதிர்கொள்ள தைரியம் வேண்டும். அவ்வாறானவர்களைக் கண்டு ஒதுங்கி விடாமல் தன் முயற்சியில் உறுதியாக நிற்க வேண்டும். சமூகத்திற்காக தான் சொல்ல வந்ததை துணிவோடும் உளத் தூய்மையோடும் படைப்பாக்கம் செய்வதில் உறுதியாக நின்று முன்னேற வேண்டும்.


உங்கள் இலக்கியப் (இலட்சியப்) பயணம், மேலும் சாதனைகளுடன் தடம் பதித்து, வெற்றிவாகை சூட, செந்தூரம் இதழ் சார்பாக எம் இனிய வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறோம். 

- கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம்

''வண்ணாத்திப் பூச்சி'' சிறுவர் பாடல் நூல் பற்றிய விவரணப் பார்வை - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா - 07.

தெற்கிலிருந்து திரும்பிப் பார்க்க வைக்கும்

பெண் ஆளுமை வெலிகம ரிம்ஸா முஹம்மத்,

இவர் எழுதிய ''வண்ணாத்திப் பூச்சி'' சிறுவர் பாடல் நூல் பற்றிய விவரணப் பார்வை

ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளுள் முதன்மைப்படுத்தி பேசப்படக் கூடியவர்களில் ஒருவராக வெலிகம ரிம்ஸா முஹம்மத் முன்னிலை வகிக்கின்றார் என்ற கூற்றில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. அந்தளவு அவரின் இலக்கியப் பணி பரந்துபட்டு நாலாதிசையும் விரிந்து கிடக்கின்றது.
சுமார் 17 வருடகாலமாக தன்னை எழுத்துத் துறையில் ஈடுபடுத்தி, இலக்கியத்தின்பால் பல்வேறு பிரிவுகளிலும் தடம் பதித்து தலை நிமிர்ந்து அனைவராலும் அறியப்படக் கூடியவராகத் தன்னை ஸ்தீரப்படுத்திக் கொண்டுள்ள ரிம்ஸா முஹம்மத் - கவிஞர், விமர்சகர், எழுத்தாளர், ஆய்வாளர், சிறுவர் படைப்பாளி எனப் பன்முக ஆளுமை கொண்ட ஒருவராகத் திகழ்கின்றார்.
பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக இருந்து நெறிப்படுத்தும் இவர், அதன் மூலமாகப் பரந்துபட்ட இலக்கியச் சேவையினை தொடர்ச்சியாக வழங்கி வருவதில் சாதனைப் பெண் என்ற பெருமைக்குள்ளும் உள்ளடக்கம் பெறுகின்றார். வளரும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி உற்சாகம் கொடுப்பதிலும், வளர்ந்தவர்களை மேலும் சிறப்புற்றோங்க பல்வேறு சிறப்பு வழிகளையும் இவர் காட்டி நிற்பதோடு, அடுத்தவர் உயர்ச்சியிலும் மகிழ்விலும் சந்தோஷம் காணுகின்ற மனப்பக்குவம் கொண்டவராகவும் காணப்படுகின்றார்.
தான் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள 13 நூல்களில் இவர் எழுதிய 'வண்ணாத்திப் பூச்சி' என்ற சிறுவர் பாடல்களடங்கிய நூல், இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பதாய் அமைந்துள்ளதோடு, சிறந்த நன்நெறிமுறைகளை உள்ளடக்கமாகக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்கள் இளமையிலேயே நல்ல பண்பியல்புகளையுடையவராக இருந்தால்தான் எதிர்கால சவால்கள் பலவற்றுக்கும் முகங்கொடுத்து சமூகத்துக்கும் நாட்டுக்கும் நற்தொண்டாற்றுகின்ற பிரஜைகளாக உருவாக்கம் பெறுவார்கள் என்ற கருத்தினை மையமாகக் கொண்டதாக இவரது பாடல்கள் பலவும் அமைந்து, ஓசை நயத்தோடு படிக்கக்கூடியதாக சிறப்புற்று விளங்குகிறது.
அன்பு, இரக்கம், காருண்யம், தாட்சண்யம் என்பவற்றை இயற்கையிலேயே அமையப்பெற்ற ரிம்ஸா முஹம்மத், சிறுவர்களின் வாசிப்புத் திறன் விருத்தியை மேலோங்கச் செய்வதிலும் தனது பாடல்களில் கூடிய கவனம் செலுத்தியுள்ளார். இது இவரது படைப்புத்திறனை அதிகரித்துக் காட்டுகிறது.
அன்பு, ஜீவகாரூண்யம், சூழல் பாதுகாப்பு, தொழில் மகிமை, நாட்டுப்பற்று போன்ற உயர்ந்த கருத்துகளும், சிந்தனைகளும் வண்ணாத்துப் பூச்சியில் பரந்து நிறைந்து காணப்படுகின்றன. சிறுவர்களுக்கு ஏற்றவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்நூல் அழகிய அட்டைப் படத்துடன் 28 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது.
நூலுக்கான முன்னுரையை கலாபூஷணம் எம்.எம். மன்சூர் வழங்கியுள்ளதோடு, பின்னட்டைக் குறிப்பினையும் அவரது எழுத்துகளே அழகுபடுத்துகின்றன. இந்நூல் 'பாடசாலை நூலகங்களுக்கு உகந்த' நூல் என்ற கல்வி அமைச்சின் தரச் சிறப்பினையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
'வண்ணாத்திப் பூச்சி' என்ற முதலாவது பாடலோடு தொடங்கி உறுப்புக்கள் என்ற பாடலுடன் இந்நூல் நிறைவு பெறுகிறது. மொத்தமாக சத்தான முத்தான 15 பாடல்கள் நூலுக்கான அணிகலன்களாக அமைந்துள்ளது. இவை சிறுவர் பாடல்கள் தொடர்பான நூலாசிரியையின் வீரியத்தை, விவேகத்தை, வித்துவத்தை பரைசாற்றி நிற்கிறது.
தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடல்
வண்ணத்துப் பூச்சி
வண்ணத்துப் பூச்சி
பறக்குது பார் பறக்குது பார்
அழகான செட்டை
அழகான செட்டை
விரிக்குது பார் விரிக்குது பார்
என்பதாகும். பிரபல்யமிக்க மேற்படி பாடலுக்கு இணையாக இந்நூலில் அமைந்துள்ள வண்ணாத்திப் பூச்சி என்ற பாடல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நூலாசிரியையின் கவித்திறன், எழுத்தாற்றல் என்பவற்றை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
பக்கம் - 9, பாடல் - 1
வண்ணாத்திப் பூச்சி பறந்து வா
வண்ணங்கள் எனக்கு எடுத்து வா
வண்ணாத்திப் பூச்சி விரைந்து வா
வாசைன மலரில் அமர்ந்து வா
பக்கம் - 11, பாடல் - 2
மரம் மனித வாழ்வியலோடு எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் அதன் பேணுதலில் மாந்தர்களின் பங்களிப்பு எந்தவகையில் அமைய வேண்டும் என்பதையும் 'மரம்' எனும் பாடல் மிக அழகாக விளக்குகிறது. மரத்தின் தேவையும் அதன் உபயோகமும் இங்கு சிறப்பாக வலியுறுத்திக் கூறப்படுகிறது.
மண்ணுக்குள் வேரூன்றி
மனிதனுக்கு நிழல் தந்து
உற்சாகம் தருகின்ற
உயர்வான மரமே
பறவைகள் தன் குஞ்சுகளுடன்
பயமின்றி வாழ்ந்திருக்க
உன் கிளைகளில் கூடமைக்க
உதவி நீ புரிகின்றாய்
பக்கம் - 17, பாடல் - 6
சிறுவர் பாடல் நூல்களில் தாயைப் பற்றிப் பாடாத நூல்களே இல்லை எனலாம். அந்தவகையில் நூலாசிரியையும் தாயைப் பற்றி மிக அருமையாக, ஆழமாகஇ தத்தரூபமாக குறிப்பிட்டுள்ளார். 'துன்பங்கள் வந்தபோது தோல் கொடுத்தாயே' என இவர் இதில் குறிப்பிடுவது தாயின் மகிமை, உயர்வு, அரவணைப்பு, பெருமை என்பவற்றைச் சிறப்பாகக் குறிப்பிடுவதாய் அமைந்துள்ளது.
ஐயிரண்டு மாதங்களாய்
என்னை சுமந்தாயே
இரத்தத்தைப் பாலாக்கி
உணவு ஊட்டினாயே
கண்ணிமையாய் எனையே
காத்து வந்தாயே
கடமைகள் பல செய்து
கனிவாக பார்த்திருந்தாயே
பக்கம் - 25, பாடல் - 12
நாம் ஒவ்வொருவரும் தாய்நாட்டை நேசித்து அதன்மீது நமக்குள்ள அதீத பற்றுறுதியை வெளிக்காட்ட வேண்டும். இதன் மூலம் தேசப்பற்று அதிகரிப்பதோடுஇ இனங்களுக்கிடையிலான பரஸ்பர அன்பும், நல்லெண்ணமும், நட்புறவும் உருவாகும் என்ற கருத்தில் இப்பாடல் அமைந்துள்ளது.
இலங்கை எங்கள் தாய் நாடு
இந்து சமுத்திர சூழ் நாடு
வளங்கள் நிறைந்த எம் நாடு
இதுவே எங்கள் புகழ் நாடு
வானுயர்ந்த மலையினிலே
தேனருவிகள் பாயுதடா
வயல்கள் செறிந்த பூமியடா
நாங்கள் செய்த நன்மையடா
மொத்தத்தில் ஒரு நல்ல சிறுவர் பாடல் நூலை வாசித்த திருப்தியை வாசகர்களுக்கு இந்நூல் ஏற்படுத்துகிறது. இதன் மூலம் தனது கருத்தியலில் நூலாசிரியை வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்..

நூலின் பெயர் - வண்ணாத்திப் பூச்சி
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கி யவட்டம்
விலை - 200 ரூபாய்
தொலைபேசி இல - 0775009222



நூல் விவரணம்:-
கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்,
கிண்ணியா - 07.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய ஒரு பார்வை - கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய ஒரு பார்வை 

- கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் 

ஆவணப்படுத்துதல், மதிப்பீடு செய்தல் என்பவற்றுக்கு எழுத்து வடிவம் இன்றியமையாததாகின்றது. இந்தவகையில் தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமையை ஆவணப்படுத்தும் ஒரு தேவையை ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' நூல் நிறைவேற்றி வைத்துள்ளமை மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். 

இலங்கையில் இன நல்லுறவு பற்றி மிக அழகாக, ஆழமாக இந்த 'விடியல்' நூல் ஆராய்கிறது. நூலாசிரியரின் கல்வி சம்பந்தமான ஒரு தேவைக்காக இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும் பொதுவாக சமூகத்தின் தேவையினைப் பூர்த்தி செய்வதிலும் குறிப்பிட்ட அளவு பங்கினை வகிக்கின்றது. 

தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நிற்கும் இலக்கியத் தாரகை வெலிகம ரிம்ஸா முஹம்மத், பன்முக ஆளுமைகள் நிறைந்த தன்னடக்கமிக்க காத்திரமானதொரு படைப்பாளி. இலங்கையிலும் சர்வதேசத்திலும் பேசப்படும் இவர் பெருமை, பொறாமை போன்ற குணங்களுக்கு அப்பாற்பட்டு திறந்த மனதோடு வெளிப்படைத் தன்மையுடன் இலக்கியப் பணியாற்றி வருவது வாசகர் மத்தியில் நன்மதிப்பையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. 

விடியல் நூல் இந்த நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மதின் 13 ஆவது நூலாக வெளிவந்திருக்கிறது. இவர் ஏற்கனவே கணக்கீடு, கவிதை, விமர்சனம், சிறுவர் கதை, மற்றும் சிறுவர் பாடல் ஆகிய துறைகளில் பல நூல்களை வெளியிட்டு வாசகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விருதுகள், பட்டங்களுக்கு சொந்தக்காரியான வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஏனையவர்களும் அவ்வாறு பெற்றுக் கொள்வதற்குரிய வழிகாட்டல்களையும் நெறியாள்கையினையும் செய்துள்ளார். இதன் மூலம் பயனடைந்தோர் பலர். இவ்வாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டுள்ள ரிம்ஸா முஹம்மத், கொழும்புப் பல்கலைக்கழக இதழியல் கற்கைநெறியின் ஒரு பகுதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 'விடியல்' எனும் ஆய்வு நூலினை எழுதி சமர்ப்பித்தது மட்டுமல்லாமல் அதனை நூலுருவாக்கம் செய்து வெளியீடும் செய்துள்ளார். 

தேர்ந்தெடுத்த ஒரு கவிஞனின், படைப்பாளுமையையும் சமூக நோக்கையும் நோக்குவதோடு இன ஐக்கியம் நோக்கிய அவரது உன்னத பயணத்தையும் ஆய்வு செய்கின்ற ஒரு நூலாக இந்த 'விடியல்' நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விடியல் நூல் மூலம் இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களது கவிதைகளை ஆய்வு செய்ய முற்படுகிறார் நூலாசிரியர். மூதூர் முகைதீன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர். அவரது கவிதைகளில் உண்மையும் நேர்மைத் தன்மையும் நிறைந்து காணப்படுவதோடு புரிந்துணர்வு இன ஐக்கியம் என்பனவும் முக்கியத்துவம் பெறுகிறது. மூதூர் முகைதீனின் மூன்று நூல்களை அடிப்படையாக வைத்து அவரது படைப்புலகையும் ஆற்றலையும் விரிவாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்துள்ளார நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத். 

80 பக்கங்களில் கைக்கடக்கமான நூலாக வெளிவந்திருக்கும் 'விடியல்' நூல் அழகிய அட்டைப் படத்துடன் மனதைக் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டத்தினால் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்நூலின் அட்டை மற்றும் கணனி வடிவமைப்பினை தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா மேற்கொண்டுள்ளார்.

நூலாசிரியர் பற்றிய பின்னட்டைக் குறிப்பினை எழுத்தாளர் திக்குவல்லை கமாலும்;, அணிந்துரையை வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தனும், வாழ்த்துரையை கிண்ணியா எஸ். பாயி;ஸா அலியும் முன்வைத்துள்ளார்கள்.

 இந்நூல் ஐந்து அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது. கவிதைகள் பற்றிய அறிமுகம் முதலாவது அத்தியாயத்திலும், கவிதையின் வரைவிலக்கணம், வகைப்பாடுகள், கவிதை உலகின் மாற்றம், வளர்ச்சி பற்றி இரண்டாவது அத்தியாயத்திலும், மூதூர் முகைதீனும் அவரது படைப்புலகமும் பற்றி மூன்றாவது அத்தியாயத்திலும் குறிப்பிட்டு நான்காவது அத்தியாயத்தில் மூதூர் முகைதீனின் மூன்று கவிதை நூல்களும் இன ஒற்றுமைக்கு எவ்வகையில் பங்களிப்புச் செய்கின்றன என்பதை அவரது கவிதைகளை எடுத்து ஆராய்ந்து மிகவும் தெளிவாக முன்வைத்துள்ளார் நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத். 

ஐந்து அத்தியாயங்களுக்குள் பிரதான கருப்பொருள்கள் அத்தனையும் உள்ளடக்கம் பெற்றுள்ளது. கவிதை பற்றிய ஓர் அறிமுகம், கவிதையின் வரைவிலக்கணம், மூதூர் முகைதீனின் அவர்கள் பற்றியும் அவரது பிட்டும் தேங்காய்ப் பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய மூன்று நூல்கள் பற்றியும் அத்துடன் கவிதைகளின் சமூக கலாசார பங்களிப்புகள் மற்றும் வாசகர்கள் மத்தியில் கவிதைகளுக்கான வரவேற்பு போன்ற பிரதான தலைப்புகளுடன் விடயதானங்கள் மிகவும் நேர்த்தியாக முன்வைக்கப்பட்டுள்ளன. 

இனி சில ஆய்வுக் கவிகளின் முக்கியத்துவத்தை இங்கு நோக்குவோம். 

யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் சந்தோஷமாக வாழ்ந்து மடிந்த நம் மூதாதையர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்பதினை பின்வரும் கவிதை (பக்கம் 38) விளக்கி நிற்கின்றது. 


பிறந்த மண்ணிலே நாங்கள் 

அகதிகளாக்கப்படும் போது 

சொந்த மண்ணிலே 

நிரந்தரமாய் உறங்கிவிட்ட 

எம் முன்னோர்களை எண்ணி 

பெருமைப்படுகின்றோம் 

புண்ணியம் புரிந்தவர்கள்  


பின்வரும் வரிகள் (பக்கம் 40) யுத்தத்திற்கு முன்பு இனங்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமையினதும் அன்பினதும் வெளிப்பாட்டை அப்பட்டமாக எடுத்துச் சொல்கிறது. 


பிட்டும் தேங்காய்ப் பூவும் 


நோன்புக் கஞ்சியை 

விரும்பிச் சுவைத்திட 

மாலைப் பொழுதில் 

வீட்டுக்கு வந்து 

உரிமையுடன் 

உம்மாவிடம் கேட்டு வாங்கி 

உறிஞ்சிக் குடிக்கும் 

விஜயன்... விமலன்... 

நட்பு மலர்கள் 

தினமும் மணக்கும் 


பிள்ளையார் கோவிலில் 

சிவராத்திரிக்கு 

சின்னராசாவின் பக்கத்தில் 

அன்வர் இருந்து 

மோதகம் உண்பான் 

ஐயர் வந்து 

சிரித்தபடியே..

அவித்த கடலையையும் 

அள்ளிக் கொடுப்பார். 


மரம் நட்டு மழை பெறுவோம் எனும் கவிதை (பக்கம் 43) கீழே தரப்படுகிறது.


மரங்கள் நடுவோம் 


தீயினால் வெந்து 

சாம்பலான 

எம் தேசத்து மண்ணில் 

உரத்திற்கும், வளத்திற்கும் 

என்ன குறை? 

அதனால் 

மரங்கள் நடுவோம் 

உரத்தினை 

உணவாய்ப் பெற்று 

மழையினைப் பெறுவோம்! 


மக்கள் பகைமைகளை மறந்து மீண்டும் ஒன்றுகூடி வாழ வேண்டும் என்பதை பின்வரும் கவிதை (பக்கம் 58) சுட்டிக் காட்டுகிறது. 


இனத்தின் பெயரால் நாம் பிரிந்து 

இணங்கி வாழும் வழி மறந்து 

மனதில் பகைமை தான் வளர்த்து 

மனித நேய மாண்பிழந்து 

பிணக்கில் வாழும் பிழை தீர


சமாதான மலரின் வாசனை நுகர்வதற்கு மனது துடிப்பதையும் திடீரென முளைக்கும் உறவுகள் நிலைத்திருப்பதற்காக இதயம் பாடுபடுவதையும் அடிப்படையாகக் கொண்டு பின்வரும் கவிதை (பக்கம் 66) அமைந்துள்ளது. 


அடங்கிக் கிடக்கும் உணர்வுகள் 


திரும்பிப் பார்க்க முடியாத 

தூரத்தில் இருக்கும் 

சமாதான மலர்களின் மணத்தை 

மறுபடியும் நுகரும் ஆவலில் 

அலையும் மனதுடன் 

இரவு முழுவதும் 

கனவுப் பூக்கள் மணக்கும் 


மழைக் காலத்து காளானாய் 

முளைக்கும் உறவுகள் 

மனத் தோட்டத்தில் வேரூன்றி 

கிளைவிட்டுப் படர 

அந்த அரவணைப்பு நிழலில் 

ஆறுதல் கிடைக்கும் 

சமாதானம் 


இவ்வாறு சிந்திக்கத் தூண்டும் நயமிக்க பல்வேறு கவிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 

மொத்தத்தில் 'விடியல்' எனும் ஆய்வு நூல் மூலமாக வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது இலக்கிய வாழ்வில் புதியதொரு விடியலை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அன்னாருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.


நூல்:- விடியல்

நூல் வகை:- ஆய்வு

நூலாசிரியர்:- ரிம்ஸா முஹம்மத்

தொலைபேசி:- 0775009222

விலை:- 400 ரூபாய்

வெளியீடு:- பூங்காவனம் இலக்கிய வட்டம்



நூல் விமர்சனம்:-  கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்